
தேசிய முன்னணியில் மஇகா தொடர்ந்து ஓரங்கட்டப்படுவது கட்சிக்கும் இந்திய சமூகத்திற்கும் மிகப் பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்துவதாக மஇகா ஊடகப் பிரிவுத் தலைவர் சிவசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
செனட்டர் நியமனங்கள், அரசு சார்ந்த நிறுவனங்கள் (GLC) தொடர்பான பதவிகள் உள்ளிட்ட முக்கிய முடிவுகளில் மஇகா தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
“தேசிய முன்னணி தலைவர் வழியாக கட்சி சமர்ப்பித்த பெயர்ப் பட்டியல்களும் எந்த பலனையும் அளிக்கவில்லை,” என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
மஇகா பலமுறை செனட்டர் பதவிகள் மற்றும் ஜிஎல்சி நியமனங்களுக்கு தனது பரிந்துரைகளை வழங்கியிருந்தாலும், இந்திய சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை உண்மையாக பிரதிபலிக்கும் முன்னேற்றம் இதுவரை இல்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
தேசிய முன்னணி அமைச்சர்கள் தலைமையிலான அமைச்சகங்களின் கீழ் 200க்கும் மேற்பட்ட ஜிஎல்சி நியமனங்கள் உள்ளதாக கூறிய அவர், “ஆனால் மஇகாவுக்கு இன்னும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை,” என்றார்.
இந்த நிலைமை, கூட்டணிக்குள் மஇகாவின் குரலும் கோரிக்கைகளும் உண்மையில் மதிக்கப்படுகிறதா என்ற கேள்வியை எழுப்புவதாகவும் சிவசுப்பிரமணியம் தெரிவித்தார்.



