
போலி மை கார்ட்டை பயன்படுத்தி தேசியப் பதிவுத் துறையின் (JPN) அதிகாரிகளை ஏமாற்ற முயன்ற இந்தோனேசிய பெண் ஒருவர், க்ளென்மேரியில் நடத்தப்பட்ட சிறப்பு சோதனையில் கைது செய்யப்பட்டார்.
இந்தோனேசியாவின் லோம்போக்கைச் சேர்ந்த 28 வயதுடைய அந்தப் பெண், “மரிசா” என அறியப்படுகிறார். உள்ளூர் மக்களைப் போலவே சரளமாக மலாய் மொழி பேசும் அவர், இன்று க்ளென்மேரியில் உள்ள ஒரு சர்வதேச பிராண்ட் நிறுவனத்தின் இரண்டு கிடங்குகளில் மேற்கொள்ளப்பட்ட “Ops Pandan” நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட 27 வெளிநாட்டவர்களில் ஒருவராக உள்ளார்.
இருப்பினும், தேசியப் பதிவுத் துறை அதிகாரிகள் அந்த மை கார்ட்டில் இருந்த பல சந்தேகத்திற்கிடமான அம்சங்களை உடனடியாகக் கண்டறிந்ததால், அவரின் திட்டம் தோல்வியடைந்தது.
விசாரணையில், 300 ரிங்கிட் பணம் கொடுத்து கிள்ளானில் உள்ள ஒருவரிடமிருந்து அந்த போலி மை கார்ட்டைப் பெற்றதாக அவர் தெரிவித்தார்.
மேலும், வேலைக்கு விண்ணப்பிப்பதற்காக அந்த அடையாள அட்டையை பயன்படுத்தியதாகவும், கடந்த எட்டு ஆண்டுகளாக மலேசியாவில் வசித்து வருவதாகவும் கூறினார்.
அதே நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட 30 வயதுக்கு மேற்பட்ட மற்றொரு இந்தோனேசிய ஆண், ஒரு வேலை முகமை தன்னை 7,000 ரிங்கிட் மோசடி செய்ததால், வேலை தேடும் அவசரத்தில் போலி மை கார்ட்டைப் பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாக தெரிவித்தார்.
மலேசியாவில் தொடர்ந்து தங்கி வேலை தேடுவதற்காக, போலி மை கார்ட்டை வாங்க தனது கிராமத்தில் உள்ள குடும்பத்தினரிடமிருந்து 400 ரிங்கிட் கடன் வாங்கியதாகவும் அவர் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பில் தேசியப் பதிவுத் துறை மற்றும் குடிநுழைவு துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.



