
முத்ரா திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள 220 மில்லியன் ரிங்கிட் முழுமையாக இந்திய தொழில்முனைவர்களை சென்றடைய வேண்டும் என்பதே மைக்கியின் முக்கிய இலக்காகும் என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சு, இந்திய தொழில்முனைவோருக்கான பொருளாதார ஊக்குவிப்பு திட்டமான “முத்ரா”விற்காக மொத்தம் 220 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கியுள்ளது.
இந்த நிதியில் தெக்குன் நேஷனல் மூலம் 120 மில்லியன் ரிங்கிட், பேங்க் ரக்யாத் மூலம் 15 மில்லியன் ரிங்கிட், எஸ்எம்இ பேங்க் மூலம் 50 மில்லியன் ரிங்கிட், அமானா இக்தியார் மூலம் 27 மில்லியன் ரிங்கிட் மற்றும் மலேசிய கூட்டுறவு ஆணையம் மூலம் 11 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
“கடந்த மே 10ஆம் தேதி வரை சுமார் 70 மில்லியன் ரிங்கிட் பயன்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையும் முழுமையாக இந்திய தொழில்முனைவர்களை சென்றடைய வேண்டும்,” என்றார்.
இதனை அடிப்படையாகக் கொண்டு, இந்திய சமூகத்திற்கு திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மைக்கி நாடு தழுவிய “ரோட் ஷோ” நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சிகள் ஜூன் 5ஆம் தேதி சிரம்பானில் தொடங்கி, ஜூன் 12ஆம் தேதி கோத்தா பாரு, ஜூன் 13ஆம் தேதி மலாக்கா, ஜூன் 20ஆம் தேதி சுங்கைப்பட்டாணி, ஜூன் 21ஆம் தேதி பேரா, ஜூன் 28ஆம் தேதி ஜொகூர் மற்றும் ஜூலை 4ஆம் தேதி கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளன.
அதனைத் தொடர்ந்து பகாங் மாநிலத்திலும் நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளதாக டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.



