
மலாயா பல்கலைக்கழகத்தின் (UM) முத்திரையை சட்டவிரோதமாக பயன்படுத்தி போலி அழகியல் மருத்துவப் பயிற்சிகளை வழங்கியதாக கூறப்படும் நிறுவனத்துக்கு எதிராக போலிஸ், சுகாதார அமைச்சு மற்றும் உயர்கல்வி அமைச்சு உடனடி விசாரணை நடத்த வேண்டும் என்று ம.சீ.சா பொது புகார்கள் பிரிவு தலைவர் டத்தோஸ்ரீ மைக்கல் சோங் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மோசடி தொடர்பாக பாதிக்கப்பட்ட ஐந்து பேரிடமிருந்து புகார்கள் கிடைத்துள்ளதாகவும், அவர்கள் சுமார் 100,000 ரிங்கிட் முதல் 180,000 ரிங்கிட் வரை பண இழப்பை சந்தித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒரு ஹோட்டலில் நடைபெற்ற பயிற்சியில் கலந்துகொண்டதாகவும், பின்னர் வழங்கப்பட்ட சான்றிதழ்களில் மலாயா பல்கலைக்கழகத்தின் சின்னம் சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டிருந்ததை பார்த்தபோதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்ததாகவும் மைக்கல் சோங் கூறினார்.
“பயன்படுத்தப்பட்ட அனைத்து சான்றிதழ்களும் அங்கீகாரங்களும் போலியானவை என்று பின்னர் கண்டறியப்பட்டது,” என்றார் அவர்.
மேலும், பயிற்சியில் பங்கேற்க மக்களை சம்மதிக்க வைப்பதற்காக மலாயா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பிரபல கல்வி நிறுவனங்களின் பெயர்கள் மற்றும் படங்களை அவர்கள் பயன்படுத்தியதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த தகவல்களை வெளியிட்ட மைக்கல் சோங், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற மோசடிகளால் மேலும் பலர் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.



