
ஈரான் போரைத் தொடர்ந்து உலகளவில் உருவாகியுள்ள எரிசக்தி நெருக்கடி குறித்த கவலைகளுக்கு மத்தியில், மலேசியாவில் எரிபொருள் விநியோகம் தற்போது போதுமான அளவில் இருப்பதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் உறுதியளித்துள்ளார்.
இதற்கு முன்னர், துணைப் பிரதமரும் எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் வள மாற்றுத்துறை அமைச்சருமான டத்தோ ஸ்ரீ பாடிலா யூசோப், நாட்டின் தற்போதைய எரிசக்தி கையிருப்பை ஜூலை மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரை நீட்டிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்திருந்தார்.
அவரின் கூற்றுப்படி, வெளிநாடுகளில் இருந்து கூடுதல் எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்கான முயற்சிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸ், தேவையான எரிபொருள் விநியோகத்தை உறுதிசெய்ய ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி, பெட்ரோனாஸ் தனது எரிபொருள் நிலையங்களில் ஜூன் மாத இறுதி வரை போதுமான எரிபொருள் கையிருப்பு இருப்பதாக அறிவித்திருந்தது.
மலேசியாவின் மொத்த எரிபொருள் தேவையில் சுமார் 50 விழுக்காட்டை பெட்ரோனாஸ் வழங்கி வருகிறது. மீதமுள்ள தேவையை நாட்டில் செயல்படும் பிற எண்ணெய் நிறுவனங்கள் பூர்த்தி செய்து வருகின்றன.
உலகளாவிய பதற்ற நிலை அதிகரித்தாலும், நாட்டில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்படாது என்பதை அரசாங்கம் தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகிறது.



