
இந்தியர்களுக்கான தெக்குன் கடனுதவியின் உச்ச வரம்பை 250,000 ரிங்கிட்டாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக மைக்கி தலைவர் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நெகிரி செம்பிலான் இந்திய வர்த்தக தொழிலியல் சங்கத்தின் 38ஆவது ஆண்டு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அந்த கோரிக்கையை பிரதமரின் கவனத்திற்கு மைக்கி கொண்டு செல்லும் என்றும் உறுதியளித்தார்.
“நெகிரி செம்பிலானில் உள்ள இந்திய வர்த்தகர்களின் முன்னேற்றத்திற்காக இந்தச் சங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, வரும் ஜூன் 5ஆம் தேதி முத்ரா திட்ட விளக்கக் கூட்டத்தையும் ஏற்பாடு செய்துள்ளது,” என்று அவர் கூறினார்.
தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சு, முத்ரா திட்டத்தின் கீழ் 220 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கியுள்ளதாகவும், அந்த நிதியை இந்திய சமூகத்திடம் கொண்டு சேர்ப்பதே மைக்கியின் முக்கிய நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக உரையாற்றிய சங்கத் தலைவர் திருநாவுக்கரசு, தற்போது இந்தியர்களுக்கு வழங்கப்படும் தெக்குன் கடனுதவியின் அதிகபட்ச தொகை 100,000 ரிங்கிட் மட்டுமே என சுட்டிக்காட்டினார்.
“தற்போதைய பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்த வரம்பை 250,000 ரிங்கிட்டாக உயர்த்த வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.
அதற்கு பதிலளித்த டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன், “இந்த கோரிக்கை மிகவும் நியாயமானது. இதை பிரதமரின் கவனத்திற்கு மைக்கி கொண்டு செல்லும்,” என்று தெரிவித்தார். – Nambikkai.com.my



