
16வது ஜொகூர் மாநிலத் தேர்தலுக்கு வழிவகுக்கும் வகையில், ஜொகூர் மாநில சட்டமன்றம் அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோ ஓன் ஹபிஸ் காஸி அறிவித்துள்ளார்.
ஜொகூர் மாநில இடைக்கால சுல்தான் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிமின் ஒப்புதலைப் பெற்ற பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். மாநில மக்களுக்கு தொடர்ந்து நிலையான மற்றும் வலுவான அரசாங்கத்தை வழங்கும் நோக்கத்திலேயே சட்டமன்றத்தை கலைக்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.
“ஜொகூரின் வளர்ச்சி மற்றும் மக்களின் நலனை உறுதி செய்யும் வலுவான ஆட்சியைத் தொடர்ந்து வழங்குவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சட்டமன்றம் கலைக்கப்பட்டுள்ளதால், அடுத்த 60 நாட்களுக்குள் மாநிலத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்,” என்று ஓன் ஹபிஸ் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இதன் மூலம், கடந்த சில வாரங்களாக ஜொகூரில் முன்கூட்டிய தேர்தல் நடத்தப்படுமா என்ற அரசியல் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலத் தேர்தலில், மொத்தம் 56 இடங்களில் 40 இடங்களை வென்ற பாரிசான் நேசனல் (BN) மாநில அரசை அமைத்தது. அதேவேளை, பக்காத்தான் ஹராப்பான் (PH) 12 இடங்களையும், பெரிகாத்தான் நேசனல் (PN) மூன்று இடங்களையும், மூடா (MUDA) ஒரு இடத்தையும் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.



