
நேற்று நிகழ்ந்த சோகமான சாலை விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோர விபத்தை ஏற்படுத்தியதாக நம்பப்படும் வாகன ஓட்டுநர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் வலியுறுத்தியுள்ளார்.
இந்தச் சம்பவம் நடந்திருக்கவே கூடாத ஒரு துயரமான நிகழ்வாகும் என்றும், பொதுச் சாலைகளில் பொறுப்பற்ற மற்றும் அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டியதன் விளைவாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். “இந்த மிகப் பெரிய இழப்பிற்காக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வகையான பொறுப்பற்ற வாகன ஓட்டம் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது,” என்று அவர் கூறினார்.
மேலும், இந்த வழக்கில் முழுமையான நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக போலிஸ் விசாரணை விரைவுபடுத்தப்பட வேண்டும் என்றும், விசாரணை ஆவணங்கள் விரைவில் அரசு தலைமை சட்டத்துறை தலைவர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும் என தாம் நம்புவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
சாலைப் பாதுகாப்பு விதிகளை அலட்சியம் செய்வது பல உயிர்களை காவுகொள்ளும் என்பதை இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை நினைவூட்டுவதாகவும், சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.



