
நெகிரி செம்பிலான் நம்பிக்கை கூட்டணி (PH) தலைவர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டம் ஒரு சாதாரண மற்றும் வழக்கமான கூட்டமே என மாநில ஜசெக (DAP) தலைமைச் செயலாளர் சா கீ சின் விளக்கம் அளித்துள்ளார்.
இன்று காலை நெகிரி செம்பிலான் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹரூனின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. மாநில நம்பிக்கை கூட்டணியின் தலைவராக அமினுடின் ஹரூன் தலைமையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், வரவிருக்கும் பொதுத் தேர்தலை முன்னிட்டு கூட்டணியின் தயார்நிலை, அரசியல் நிலவரம் மற்றும் தேர்தல் தொடர்பான ஆயத்தப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
ஜொகூர் மாநில சட்டமன்றம் நேற்று கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தக் கூட்டம் நடைபெற்றதால் பல்வேறு ஊகங்கள் எழுந்த நிலையில், அது எந்தவொரு விசேட அல்லது அரசியல் அவசரக் கூட்டமும் அல்ல என்று சா கீ சின் வலியுறுத்தினார். மாறாக, கூட்டணியின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் திட்டங்களை மதிப்பீடு செய்யும் வழக்கமான ஆலோசனைக் கூட்டமாகவே அது நடைபெற்றதாக அவர் கூறினார்.
“நேற்று மாலை ஜொகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதால், குறுகிய கால அவகாசத்தில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனால் சிலர் இதை அவசரக் கூட்டம் எனக் கருதியிருக்கலாம். ஆனால் இது ஒரு சாதாரண கூட்டமே தவிர, எந்தவொரு சிறப்புக் கூட்டமோ அல்லது அரசியல் நெருக்கடி தொடர்பான சந்திப்போ அல்ல,” என்று அவர் தெளிவுபடுத்தினார்.



