
உலக நாடுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாக உலக வானிலை அமைப்பு (WMO) தெரிவித்துள்ளது. ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் எல் நினோ (El Niño) காலநிலை நிகழ்வு உருவாக 80 சதவீத வாய்ப்பு இருப்பதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலில் பதிவாகி வரும் அசாதாரண கடல் மேற்பரப்பு வெப்பநிலையே இந்த மாற்றத்திற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாக உலகின் பல பகுதிகளில் வறட்சி, கனமழை, வெப்ப அலைகள் மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகள் அதிகரிக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
WMO-வின் சமீபத்திய கணிப்பின்படி, நவம்பர் மாதத்திற்குள் எல் நினோ உருவாகும் வாய்ப்பு 90 சதவீதத்திற்கும் அதிகமாக உயரக்கூடும். அதே நேரத்தில், உலகின் பெரும்பாலான பகுதிகளில் வழக்கத்தை விட அதிக வெப்பநிலை பதிவாகும் அபாயமும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ், எல் நினோவை “அவசர காலநிலை எச்சரிக்கை” என வர்ணித்துள்ளார். அதன் தாக்கம் உலக நாடுகளின் எல்லைகளைத் தாண்டி வேகமாகப் பரவக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
விவசாயம், நீர் வள மேலாண்மை, சுகாதாரம் மற்றும் எரிசக்தித் துறைகள் அதிகளவில் பாதிக்கப்படக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக வலுப்படுத்துமாறு உலக நாடுகளுக்கு WMO அழைப்பு விடுத்துள்ளது.



