
வரவிருக்கும் ஜொகூர் மாநிலத் தேர்தலுக்குப் பிறகு தேசிய முன்னணிக்கு (BN) மாநில அரசை அமைக்கும் ஆணை கிடைத்தாலும், ஜனநாயக செயல் கட்சியுடன் (DAP) இணைந்து ஆட்சி அமைப்பதில் தனக்கு விருப்பமில்லை என்று ஜொகூர் மந்திரி புசார் டத்தோ ஓன் ஹபிஸ் காஸி தெரிவித்துள்ளார்.
ஜொகூர் பாருவில் உள்ள கோத்தா இஸ்கந்தர் எடுசிட்டி அரங்கில் நடைபெற்ற 16ஆவது ஜொகூர் மாநிலத் தேர்தல் கேந்திர தொடக்க விழாவில் உரையாற்றிய அவர், ஜொகூரில் உள்ள 26 அம்னோ பிரிவுகளின் விருப்பத்தையும் நிலைப்பாட்டையும் மதித்து இந்த உறுதிமொழி வழங்கப்படுவதாகக் கூறினார். அந்த பிரிவுகள் அனைத்தும் மாநிலத்தின் 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் தேசிய முன்னணி தனித்து போட்டியிட வேண்டும் என்று விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.
“ஜொகூர் தேசிய முன்னணியின் நிலைப்பாடு தெளிவானது. மாநில அரசை அமைக்கும் வாய்ப்பு கிடைத்தால், ஜசெகவுடன் இணைந்து செயல்பட மாட்டோம். ஜொகூர் மக்களின் நம்பிக்கையுடன் தேசிய முன்னணி தனது சொந்த பலத்தில் ஆட்சியை அமைக்க விரும்புகிறது,” என்று ஓன் ஹபிஸ் தெரிவித்தார்.
மேலும், இந்த நிலைப்பாடு குறித்து அம்னோ தலைவரும் தேசிய முன்னணி தலைவருமான துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அஹ்மட் ஜாஹித் ஹமிடிக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ஜொகூர் மாநிலத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேசிய முன்னணியின் இந்த அறிவிப்பு மாநில அரசியல் சூழலில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.



