
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்த LRT3 ஷா ஆலாம் பாதை தொடக்க விழாவில் கலந்து கொண்டது மகிழ்ச்சியளிப்பதாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் தெரிவித்துள்ளார்.
37.8 கிலோமீட்டர் நீளமுடைய LRT3 ஷா ஆலாம் பாதை, பந்தார் உத்தமாவிலிருந்து ஜோகான் செத்தியா வரை 20 நிலையங்களை இணைக்கும் முக்கிய பொதுப் போக்குவரத்து திட்டமாகும். இந்த புதிய ரயில் சேவையின் மூலம் கிள்ளான் பள்ளத்தாக்கின் மேற்கு வழித்தடத்தில் வசிக்கும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயனடைவார்கள் என அவர் குறிப்பிட்டார்.
இந்த புதிய போக்குவரத்து வசதி மக்களின் அன்றாடப் பயணத்தை எளிதாக்குவதோடு, போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்து, மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தும் என்று டாக்டர் குணராஜ் தெரிவித்தார்.
மேலும், ஜூன் 29 முதல் ஜூலை 31, 2026 வரை 30 நாட்களுக்கு LRT3 மற்றும் இணைப்பு பேருந்து சேவைகளில் இலவச பயண வசதி வழங்கப்படும் என பிரதமர் அறிவித்திருப்பதை அவர் வரவேற்றார். இந்த முயற்சி, பொதுமக்கள் நவீன, வசதியான மற்றும் திறமையான பொதுப் போக்குவரத்து சேவையை நேரடியாக அனுபவிக்கும் சிறந்த வாய்ப்பாக அமையும் என்றார்.
ஷா ஆலாம் LRT3 பாதையின் தொடக்கம், பொதுப் போக்குவரத்தை மக்களின் முதல் தேர்வாக மாற்றும் புதிய மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்றும், நிலையான வளர்ச்சி மற்றும் போட்டித்திறன் மிக்க மாநிலம், நாட்டை உருவாக்கும் அரசாங்கத்தின் நோக்கத்திற்கு இது வலுசேர்க்கும் என்றும் அவர் கூறினார்.
இந்தப் பெரும் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிய அரசாங்கம், சம்பந்தப்பட்ட அனைத்து அமைப்புகள் மற்றும் அதிகாரிகளுக்கும் டாக்டர் குணராஜ் தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.



