
ஜொகூர்-சிங்கப்பூர் சிறப்பு பொருளாதார மண்டலம் (JS-SEZ) தொடர்பான விவகாரத்தை தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்த வேண்டாம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஜொகூர் மாநில தேசிய முன்னணி தலைவரும் மாநில பராமரிப்பு அரசாங்கத்தின் மந்திரி பெசாருமான டத்தோ ஓன் ஹாஃபிஸ் காஸியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தத் திட்டம் மாநில அரசுடன் இணைந்து செயல்படுத்தப்படும் மத்திய அரசின் முக்கிய முயற்சி என்றும், இது மலேசியா மற்றும் சிங்கப்பூர் பிரதமர்களின் ஒத்துழைப்பின் மூலம் முன்னெடுக்கப்படும் திட்டம் என்றும் அன்வார் தெரிவித்தார்.
“இந்த விவகாரத்தை அரசியல் பிரச்சினையாக மாற்ற வேண்டாம். இந்தத் திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக மத்திய அரசு மிகப்பெரிய நிதி மற்றும் ஆதரவை வழங்கி வருகிறது,” என்று அவர் கூறினார்.
மேலும், ஜொகூர்-சிங்கப்பூர் சிறப்பு பொருளாதார மண்டல ஒப்பந்தம் இரு நாடுகளின் பிரதமர்களுக்கு இடையே கையெழுத்திடப்பட்ட முக்கிய ஒப்பந்தம் என்றும், “இது இன்னும் மாநில மந்திரி பெசாரின் நிலையை எட்டிய விவகாரம் அல்ல” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இத்திட்டத்திற்கு மத்திய அரசு வழங்கிய ஆதரவுக்கு இதுவரை நன்றி தெரிவிக்காத ஓன் ஹாஃபிஸ், தற்போது அதையே தேர்தல் பிரச்சாரத்திற்காக விமர்சிப்பதாகவும் அன்வார் குற்றஞ்சாட்டினார்.
முன்னதாக, ஜொகூர்-சிங்கப்பூர் எல்லை கடந்த பொருளாதார முயற்சிக்கான முதன்மைத் திட்டத்தை (Master Plan) மத்திய அரசு மீண்டும் மீண்டும் தாமதப்படுத்தி வருவதாக ஓன் ஹாஃபிஸ் காஸி குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.



