30.3 C
Kuala Lumpur
Sunday, July 5, 2026

Vetri

மகாபாரதம் நீதிக்கும் ஒற்றுமைக்கும் வழிகாட்டுகிறது; இந்திய சமூக மேம்பாட்டில் மடானி அரசு உறுதி – அமிருடின் ஷாரி

🔥 Views : 2,454
👁 Reading Now : 70

ஜொகூர் மாநிலத் தேர்தலுக்கான நம்பிக்கை கூட்டணியின் தேர்தல் இயக்குநரும், பிகேஆர் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, மகாபாரதத்தில் இடம்பெறும் பாண்டவர்கள்–கௌரவர்கள் போராட்டத்தை நீதிக்கான போராட்டத்தின் அடையாளமாகக் குறிப்பிட்டு, மடானி அரசாங்கம் இந்திய சமூகத்தின் கல்வி, கலாசாரம் மற்றும் நலனை மேம்படுத்தும் தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
ஜொகூரில் உள்ள தாமான் தம்போய் இந்தாவில் நடைபெற்ற “மலாம் கெபுடாயான் இந்தியா ஹராப்பான்” நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான மகாபாரதக் காவியம் இன்றும் பொருத்தமுடையதாக இருப்பதாகக் கூறினார்.
மகாபாரதம் வெறும் இலக்கியப் படைப்போ அல்லது போர்க் கதையோ அல்ல என்றும், ஒற்றுமை, பரஸ்பர மரியாதை மற்றும் நீதியை நிலைநாட்டும் உயர்ந்த வாழ்க்கைப் பாடங்களை வழங்கும் காவியம் என்றும் அவர் தெரிவித்தார்.
பாண்டவர்கள் கௌரவர்களுக்கு எதிராக நடத்திய போராட்டம், நீதியை நிலைநாட்டுவது எளிதான பாதை அல்ல என்பதை உணர்த்துகிறது. ஆனால் உண்மையையும் நெறிமுறையையும் உறுதியாகப் பின்பற்றுபவர்களே இறுதியில் வெற்றி பெறுவார்கள் என்ற முக்கியமான செய்தியை அது எடுத்துரைக்கிறது என்று அமிருடின் ஷாரி கூறினார்.
“எத்தகைய சவால்கள் வந்தாலும், இறுதியில் நன்மையே தீமையை வெல்லும். அதனால் நாம் ஒற்றுமையைப் பாதுகாத்து, ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்தி, நீதியை சமூக வாழ்வின் அடிப்படையாகக் கொள்ள வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.
பத்து கேவ்ஸ் சட்டமன்ற உறுப்பினராக நான்கு தவணைகள் பணியாற்றிய அனுபவத்தை நினைவுகூர்ந்த அவர், வளர்ச்சியும் இந்திய சமூகத்தின் கலாசார மற்றும் சமய பாரம்பரியப் பாதுகாப்பும் ஒன்றோடொன்று இணைந்து முன்னேற முடியும் என்பதற்கு பத்து கேவ்ஸ் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது என்றார்.
அந்தப் பகுதியில் பணியாற்றிய காலத்தில், பத்து கேவ்ஸை தரிசிக்க வரும் இந்து பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் வசதியாக பல்வேறு பொது உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டதாகவும் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles