
மலேசிய உள்நாட்டு கால்பந்து வரலாற்றில் புதிய மைல்கல்லை பதித்து, பினாங்கு இந்தியன் எஃப்சி அணி 16 வயதுக்குட்பட்ட மகளிருக்கான FAM லீகா புத்ரி கிண்ணம் கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
மலேசிய கால்பந்து சங்கம் (FAM) ஏற்பாடு செய்த இந்தத் தொடரின் இறுதிப்போட்டி கடந்த ஜூன் 28ஆம் தேதி, கிளானா ஜெயாவில் உள்ள PKNS அரங்கில் நடைபெற்றது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில், பினாங்கு இந்தியன் எஃப்சி அணி பெர்லீமா யுனைடெட் எஃப்சி அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை வெற்றிகரமாக கோலாக மாற்றிய பினாங்கு இந்தியன் எஃப்சி, வெற்றியை உறுதி செய்து கோப்பையை சொந்தமாக்கியது.
இந்த வெற்றியின் மூலம் பினாங்கு இந்தியன் எஃப்சி அணிக்கு சாம்பியன் கிண்ணத்துடன் RM5,000 ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. இரண்டாம் இடத்தைப் பெற்ற பெர்லீமா யுனைடெட் எஃப்சி அணிக்கு RM3,000 பரிசாக வழங்கப்பட்டது.
இத்தொடரில் சிறப்பாக விளையாடிய பினாங்கு இந்தியன் எஃப்சி வீராங்கனை தானு ஸ்ரீ, மொத்தம் 15 கோல்கள் அடித்து தொடரின் சிறந்த வீராங்கனை என்ற விருதைப் பெற்றார்.

இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்த பினாங்கு இந்தியன் எஃப்சி தலைவர் ஸ்ரீ சங்கர், “இது கடந்த ஐந்து ஆண்டுகளாக மேற்கொண்ட கடின உழைப்புக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். மகளிர் கால்பந்தை ஊக்குவிக்கும் வகையில் FAM மேற்கொண்டுள்ள இந்த முயற்சி பல இளம் வீராங்கனைகளுக்கு புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளித்துள்ளது,” என்றார்.
வரலாற்றுச் சாதனை படைத்த பினாங்கு இந்தியன் எஃப்சி வீராங்கனைகள், பயிற்சியாளர் லியோனார்ட் லாரன்ஸ் மற்றும் முழு அணிக்கும் விளையாட்டு ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் கால்பந்து அமைப்புகளிடமிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.



