
MBDK செந்தோசா மண்டபத்தில் நடைபெற்ற மவ்லிதுர் ரசூல் (Maulidur Rasul) கொண்டாட்டத்தில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
நபிகள் நாயகத்தின் வாழ்க்கை, போராட்டம் மற்றும் உயரிய நற்பண்புகளை நினைவுகூர்ந்து, அவற்றை அன்றாட வாழ்க்கையில் பின்பற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் நிகழ்வாக இந்தக் கொண்டாட்டம் அமைந்ததாக அவர் தெரிவித்தார்.
மவ்லிதுர் ரசூல் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது தமக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் நன்றியுணர்வையும் அளிப்பதாகக் குறிப்பிட்ட டாக்டர் குணராஜ், இத்தகைய நிகழ்வுகள் சமூகத்தினரிடையே புரிந்துணர்வையும் நல்லிணக்கத்தையும் மேலும் வலுப்படுத்துவதாகக் கூறினார்.

“மவ்லிதுர் ரசூலின் உணர்வு அன்பு, ஒற்றுமை, பரஸ்பர மரியாதை மற்றும் பிறர் மீதான அக்கறை போன்ற உயரிய விழுமியங்களை சமூகத்தில் தொடர்ந்து வளர்க்க வேண்டும்,” என்று அவர் கேட்டுக் கொண்டார்.
அனைத்து சமூகத்தினரும் ஒருவரையொருவர் மதித்து, ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் செந்தோசாவை மேலும் நல்லிணக்கம், அன்பு மற்றும் ஒற்றுமை நிறைந்த சமூகமாக உருவாக்க முடியும் என்றும் டாக்டர் குணராஜ் தெரிவித்தார்.



