
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பேரிடரில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காகவும், காணாமல் போனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டியும் கோலாலம்பூர் ராமலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
இந்தப் பேரிடரில் நேபாள மக்கள் மட்டுமின்றி மலேசியர்கள் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்காக ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றதுடன், பக்தர்கள் விளக்குகளை ஏற்றி அவர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தனை செய்தனர். காணாமல் போனவர்கள் பாதுகாப்பாக தங்களது குடும்பத்தினரிடம் திரும்ப வேண்டும் என்றும் கூட்டுப் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ், செனட்டர் சரஸ்வதி கந்தசாமி, முன்னாள் மஇகா தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ். சுப்பிரமணியம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்வில் கருத்துரைத்த டாக்டர் குணராஜ், நேபாள பேரிடரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சிறப்பு பிரார்த்தனையில் இந்து சமூகத்தினர் ஒன்றிணைந்து அஞ்சலி செலுத்தியதாக தெரிவித்தார்.
நேபாள பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் மலேசிய அரசாங்கம் ஒரு மில்லியன் நிதியுதவி வழங்கியுள்ளதாகவும், மீட்பு மற்றும் உதவிப் பணிகளுக்காக மலேசியாவின் SMART குழு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, நேபாளத்தில் காணாமல் போன மற்றும் பாதிக்கப்பட்ட மலேசியர்கள் தொடர்பான தகவல்களை விஸ்மா புத்ரா தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் டாக்டர் குணராஜ் தெரிவித்தார்.
இந்தத் துயரமான நேரத்தில் நேபாள மக்களுடன் மலேசியர்கள் துணை நிற்பதாகக் குறிப்பிட்ட அவர், சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய அனைவருக்கும் தனது நன்றியையும் தெரிவித்தார்.



