
பினாங்கு தென் செபராங் பிறை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும்
நிபோங் திபால் கலிடோனியா தோட்ட மக்களுக்கான இலவச வீடமைப்பு
திட்டம் மாநில நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் ஒரு வரலாற்று
சாதனையாகும் என இந்த வீடமைப்பு நிர்மாணிப்பை மேற்கொண்டு வரும்
எக்கோவேல்டு ஹோரிசோன் செண்டிரியான் பெர்ஹாட் மேம்பாட்டு நிறுவன
குழுமத்தின் தலைமை அதிகாரியும்,துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ
சுந்தரராஜு சோமு புகழாரம் சூட்டினார். மேம்பாட்டு திட்டங்கள்
மேற்கொள்ளப்படும் இடங்களில் வாழும் மக்களை புறக்கணிக்கக்கூடாது,வெறுமனே விரட்டக்கூடாது என்ற மனிதாபிமானக்
கொள்கையோடு மாநில அரசாங்கத்தின் இந்த கொள்கையை தாம் பெரிதும் பாராட்டுவதாக அவர் கூறினார்.

தோட்டத்தின் வளர்ச்சிக்காகவும்,மேம்பாட்டிற்காகவும் வியர்வையை இரத்தமாக சிந்தி உழைத்து பாடுபட்ட முன்னாள் தொழிலாளர்களின் வாழ்வில் பினாங்கு
அரசாங்கம் ஒளியேற்றி வைத்துள்ளது என்றார்.
மேலும் இதுபோன்ற சொந்த இலவச வீடமைப்பு திட்டத்தை நாட்டில் பினாங்கு அரசாங்கம் மட்டுமே
ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது என தெரிவித்தார்.
முதல் கட்டமாக கலிடோனியா தோட்ட மக்களுக்காக சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில்

70 வீடுகளை தமது நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.பினாங்கு மாநிலத்
துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமியின் சிந்தனையில் உதித்த இந்த வீடமைப்பு திட்டத்திற்கு ” தாமான் கலிடோனியா இண்டா “
எனும் பெயரைச் சூட்டி மாநில அரசாங்கம் சாதனை படைத்துள்ளதில் தாம்
மிகுந்த பெருமைக் கொள்வதாகவும் டத்தோஸ்ரீ சுந்தரராஜு தெரிவித்தார்.
