
நோய்தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனை மற்றும் ஷா ஆலம் மருத்துவமனை வளாகத்தில் கட்டில்கள் அமைக்கப்பட்டன.
இந்தக் கட்டில்களில் நோயாளிகள் படுத்திருக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியது.
இதனை தொடர்ந்து இப்போது இவ்விரு மருத்துவமனைகளில்
கட்டில்கள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கையை சிலாங்கூர் மாநில சுகாதார இலாகா அதிகரித்துள்ளது.
நோய்த் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சிலாங்கூர் மாநில சுகாதார இயக்குநர் டத்தோ டாக்டர் ஷஹாரி ஙடிமான் கூறினார்.
மலேசிய ஆயுதப்படையின் வாயிலாக கள மருத்துவமனை அமைக்கும் பணியும் போர்க்கால அடிப்படையில் மருத்துவ உபகரணங்களை தருவிக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கிள்ளான் பள்ளத்தாக்கிற்கு வெளியே உள்ள மருத்துவ அதிகாரிகள், தாதியர், துணை மருத்துவ உதவியாளர்களை உள்ளடக்கிய சுகாதாரப் பணியாளர்களை இங்கு தருவிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் கட்டிலுக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது தொடர்பில் இதற்கு விரைந்து தீர்வு காணும்படி கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ கோரிக்கை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
