
கடந்த சில தினங்களாக 100 குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான அடிப்படை உணவுப் பொருட்களை வழங்கிவரும் வேளையில் மேலும் சுற்றுப் பகுதிகளில் வசிக்கும் 120 குடும்பங்களுக்கு ஒரு வாரத்தில் உணவுப் பொருளை வழங்கி உதவ இருக்கிறோம். இதன் தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை அடையாளம் காணும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறோம்.
அதேசமயம், இந்த உதவி யாவும் பொருத்தமான குடும்பங்களை சென்றடைகிறதா என்பதையும் உறுதிசெய்ய வேண்டியுள்ளது. காரணம், சக்தி அறிவாரியத்தின் சார்பில் இவ்வாறு உதவிப் பொருள் வழங்கும்போது நல்ல நிலையில் இருக்கும் குடும்பத்தினரும் பொருட்களை வாங்கிச் செல்வதை காண முடிகிறது.
அதனால், நலிந்த குடும்பங்களுக்கு மட்டும் இந்த உணவுப் பொருள் சேர்வதை உறுதிப்படுத்தவும் அதற்கான ஆய்வுப் பணியை மேற்கொள்ளவும் வேண்டி இருக்கிறது. தற்போது, நடமாட்டக் கட்டுப்பாட்டுக் காலம் என்பதால், எங்களுக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது.
ஏழையருக்கு செய்யும் உதவி இறைவனுக்கு ஆற்றும் தொண்டு என்னும் அடிப்படையில் கொடைமனமும் தயாள சிந்தனையும் கொண்டு நன்கொடை அளிப்பவர்கள் தொடர்ந்து உதவிக்கரம் நீட்டும்படி கேட்டுக் கொள்ளும் அதேவேளை, நாமெல்லாம் சேர்ந்து முன்னெடுக்கும் இந்த சேவைக்கு அருள்மிகு இலெட்சுமி கணபதியும் அருள்மிகு அன்னை சக்தி மாரியம்மனும் துணை இருப்பார்கள் என்று முத்துக்குமார சிவாச்சாரியார் தெரிவித்துள்ளார்.
