
நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருமானத்தை இழந்து இருக்கும் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 5,000 குடும்பங்களுக்கு உணவு கூடைகள் விரைந்து அனுப்பப்பட்டு வருவதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். கேசவன் தெரிவித்தார்.
அரசாங்கம் வழங்கிய மூன்று லட்சம் வெள்ளியில் 5,000 குடும்பங்களுக்கு உதவி கொண்டிருக்கிறோம்.
இந்த தொகுதியில் மொத்தம் 25 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன.
இதில் ஏராளமான குடும்பங்கள் பி 40 பிரிவைச் சேர்ந்தவர் கள்.
சுங்கை சிப்புட் தொகுதி மக்களை ஒருபோதும் நான் கைவிட்டது இல்லை.
சுங்கை சிப்புட் தொகுதி சேவை மையத்தின் மூலம் அனைத்து இன மக்களுக்கும் உதவிகள் கிடைத்த வண்ணம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த திங்கட்கிழமை 500 பேருக்கு கட்டங்கட்டமாக உணவு வகைகளை வழங்க ஏற்படுத்தப்பட்டன. ஆனால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது அங்கு வந்த போலீசார் உணவு கூடைகள் வழங்குவதை நிறுத்திக் கொள்ளும்படி ஆலோசனை கூறினர்.
அங்கு கடமையிலிருந்த பணியாளர்களும் பொதுமக்களை வீட்டுக்கு செல்லும்படி கேட்டுக்கொண்டனர்.
ஆனால் உதவி கேட்க வந்தவர்களை நாங்கள் விரட்டுகிறோம் என்ற தோரணையில் சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்பி கொண்டிருக்கிறார்கள் என்று கேசவன் சுட்டிக்காட்டினார்.
எனக்கு எதிராக ஒரு சில இந்த வதந்திகளை பரப்பி கொண்டிருந்தாலும் சுங்கை சிப்புட் மக்கள் எப்போதும் என் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். கஷ்டப்படும் மக்களுக்கு விரைந்து உணவு கூடைகள் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.
