
அவசரக் கால பிரகடனமும்,சட்டமும் மீட்டுக் கொள்ளப்பட்டு விட்டது குறித்து எழுந்துள்ள சர்ச்சையில் சிக்கியிருக்கும் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் உடனடியாக பதவி விலக வேண்டுமென பினாங்கு மாநில அமானா கட்சியின் தலைவர் டாக்டர் ரோஸ்லான் அகமட் கேட்டுக் கொண்டார்.
கூட்டரசு சட்டங்களை யும் தேசியக் கோட்பாட்டையும் மதிக்கத் தவறியதோடு, மாட்சிமை தங்கிய மாமன்னர் அதிருப்தியடையும் வகையில் நடந்துக் கொண்டிருக்கும் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின், சட்டத்துறை அமைச்சர் தக்கியுடன் ஹாசான், நாடாளுமன்ற சபாநாயகர் டத்தோ அஸாஹர், சட்டத்துறை தலைவர் இட்ருஸ் ஹருண் ஆகியோர் உடனடியாக தங்களின் பதவியை இராஜினாமா செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
மலேசிய அரசியல் வரலாற்றில் ஒரு ஆளும் அரசாங்கத்தின் மீது அரண்மனை அதிருப்தி அடைந்திருப்பது இதுதான் முதன் முறையாகும் என டாக்டர் ரோஸ்லான் அகமட் கூறினார்.
