

நாடாளுமன்றத்தை மூடியதோடு நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களை நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைவதிலிருந்து தடுத்து நிறுத்திய போலீசாருக்கு எதிராக முன்னாள் மனிதவள அமைச்சர் குலசேகரன் இன்று போலீசில் புகார் செய்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் நேற்று
ஜொகூர் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் அக்மால் நசீர் மற்றும் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி பிரபாகரன் இருவரும் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
இந்நிலையில் இன்று போலீசில் புகார் செய்த ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம் குலசேகரன், இது தொடர்பில் சுயேட்சை விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தை நோக்கி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்தபோது கலகத் தடுப்பு போலீசார் தடுத்து நிறுத்தினர்.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட நாங்கள் நாடாளுமன்றத்திற்கு செல்ல எல்லா உரிமையும் இருக்கிறது.
எம்பிக்கள் நாடாளுமன்றம் செல்வதை நாங்கள் தடுக்கவில்லை ஆனால் சட்டவிரோத கூட்டத்தை தடுத்தோம் என்று போலீசார் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார் அவர்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறவில்லை என்றாலும் எம்பிக்கள் அங்கு செல்வதற்கு எல்லா உரிமையும் இருக்கிறது.
அந்த வகையில் எங்களை தடுத்து நிறுத்தி போலீஸ் நடவடிக்கை தொடர்பில் விசாரிக்க சுயேட்சை ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
