
செமினி நீர் சுத்திகரிப்பு பகுதியில் ஏற்பட்ட தூய்மை கேட்டினால் கிள்ளான் பள்ளத்தாக்கில் 463 இடங்களில் நீர் வினியோகம் முற்றாக தடைப்பட்டுள்ளது.
நீரில் துர்நாற்றம் வீசுவது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து கிள்ளான் பள்ளத்தாக்கின் 463 இடங்களில் நீர் விநியோகத் தடை ஏற்பட்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது இதனால் லட்சக்கணக்கான மக்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.
நீரில் வாடை வீசுவது நேற்று காலை 11.10 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு மையத்தின் பணிகள் நிறுத்தப்பட்டதாக ஆயர் சிலாங்கூர் நிறுவனம் அறிக்கை ஒன்றில் கூறியது.
இதனால் பெட்டாலிங் மாவட்டத்தில் 172 இடங்களும் உலு லங்காட் மாவட்டத்தில் 54 இடங்களும் சிப்பாங்கில் 194 இடங்களும் புத்ரா ஜெயாவில் 23 இடங்களும் கோல லங்காட்டில் 20 இடங்களும் நீர் விநியாகத் தடையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் வர்த்தக தொடர்பு பிரிவுத் தலைவர் எலினா பாஸ்ரி தெரிவித்தார்.
நீரில் கலந்த துர்நாற்றத்தை சுத்தப்படுத்தும் பணிகள் முடிவடைந்ததும் வழக்கம்போல் நீர் விநியோகம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
