
எந்தவொரு பிரச்னைகளும் வராமல் இருப்பதற்கு ஊராட்சி மன்றங்களிடம் முறையாக அனுமதி பெற்ற பின்னர் ஆலயத்தை கட்டுங்கள் என்று சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் வீ கணபதி ராவ் கேட்டுக் கொண்டார்.
எந்த ஒரு அனுமதி இல்லாமல் ஆலயத்தை எழுப்புவதை அனைத்து தரப்பினரும் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
வழிபாட்டுத் தலங்களை நிர்மாணிக்க விரும்பும் தரப்பினர் அதற்கான அனுமதியை ஊராட்சி மன்றங்களிடமிருந்து முறையாகப் பெற வேண்டும்.
இத்தகைய நடவடிக்கையின் வழி தேவையற்ற பிரச்னைகள் எதிர்காலத்தில் எழுவதை தவிர்க்க முடியும் என்று லீமாஸ் எனப்படும் பௌத்த, கிறிஸ்துவ, இந்து, சீக்கிய மற்றும் தோ சமய சிறப்பு செயல்குழுவின் இணைத் தலைவரான வீ.கணபதி ராவ் கேட்டுக் கொண்டார்.
அனுமதி இல்லாமல்
ஆலயங்கள் கட்டப்படும் பட்சத்தில் அவற்றை உடைப்பது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். இதனால் மேலும் கடுமையான சிக்கல்கள் உண்டாகும் என்று அவர் தெரிவித்தார்.
ஆலயங்களை நிர்மாணிப்பதற்கு முன்னர் அதன் திட்டமிடல் தொடர்பாக விண்ணப்பம் செய்வது கட்டாய நிபந்தனையாகும் எனக் கூறிய அவர், இது நீண்டகால அடிப்படையில் உத்தரவாதம் அளிக்கக் கூடியது என்பதால் ஊராட்சி மன்றங்களின் நிபந்தனைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றார்.
ஆங்கீகாரம் பெற்ற ஆலயங்களை அரசாங்க பதிவேட்டில் இடம் பெறச் செய்ய முடியும். மாநில அரசு இதுவரை சுமார் 300 ஆலயங்களை பதிவு செய்துள்ளது என்று அவர் சொன்னார்
