
மாரா இளநிலை அறிவியல் கல்லூரியில் பயில தாய்மொழி பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருப்பது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் சிவராசா கூறினார். தாய்மொழிப் பள்ளி மாணவர்களுக்கும் மாரா அறிவியல் தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் நேற்று முன்தினம் சிவராசா கோரிக்கை விடுத்தார். மாரா அறிவியல் தொழில்நுட்பக் கல்லூரியில் பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கான 10% சிறப்பு ஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். இந்நிலையில் அனைத்து வகை பள்ளிக்கூட மாணவர்களும் மாரா அறிவியல் தொழில்நுட்பக் கல்லூரிக்கு விண்ணப்பம் செய்யலாம் என்று புறநகர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ மாட்ஸிர் காலிட் அறிவித்துள்ளார். மேலும் பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு நிலைநிறுத்தப்படும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புறநகர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ மாட்ஸிர் காலிட் அறிவிப்பை வரவேற்பதாக சிவராசா குறிப்பிட்டார்.
