
உலக வல்லரசுகளில் முன்னோடி என்ற அடையாளத்துடன் விளங்கி வந்த அமெரிக்காவின் அடித்தளத்தையே அசைத்துப் பார்க்கும் ஒரு சம்பவம் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி நடந்தது. அமெரிக்காவின் ராணுவ தலைமையகம் பென்டகன், ஐங்கோண வடிவத்திலான கட்டடம். பாதுகாப்புத் துறையையும், பாதுகாப்பு அமைச்சரையும் குறிப்பிடுவதற்கும் இந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது. தலைநகரான வாஷிங்டன் டி.சி.யை ஒட்டி வர்ஜீனிய மாநில எல்லைக்குள் அமைந்திருக்கிறது. உலகின் மிகப்பெரிய அலுவலக வளாகங்களில் இதுவும் ஒன்று. இதன் கட்டுமானப் பரப்பு சுமார் 150 ஏக்கர். அதாவது 65 லட்சம் சதுர அடி. 5 பக்கங்கள், தரைக்கு மேலே 5 மாடிகள் என ‘பென்டகன்’ என்ற சொல்லுக்கான விளக்கத்தைத் தன்னுள்ளே கொண்ட கட்டடம் இது. இதன் மையத்தில் ஐங்கோண வடிவத்திலான 5 ஏக்கர் பரப்பு “கிரவுண்ட் ஜீரோ” என்று அழைக்கிறார்கள். உலகின் பல முக்கியப் போர்களுக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டதும், உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதும் இங்குதான். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கட்டடத்தை 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி சில பயங்கரவாதிகள் விமானத்தை மோதச் செய்து கடுமையாகச் சேதப்படுத்தினார்கள். விமானத்தில் இருந்தவர்களும், பென்டகன் கட்டடத்தில் இருந்தவர்களையும் சேர்த்து மொத்தம் 189 பேர் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். 1,800 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் படைகள் வாஷிங்டன் நகரை எரித்த சம்பவத்துக்குப் பிறகு, அங்கு நடந்த மிகப்பெரிய தாக்குதல் இதுதான்.
