
பக்காத்தான் ஹராப்பான் மீண்டும் ஆட்சிக்கு வருவதை தடுக்கவே இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புக்கு ஆதரவு வழங்கியதாக முன்னாள் பிரதமர் மொகிதீன் யாசின் சொல்வது சுத்தப்பொய் என்று ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம் குலசேகரன் தெரிவித்தார். 17 மாதத்தில் பெரிக்கத்தான் நேஷனல் அரசாங்கம் தோல்வி கண்டதால் அதிருப்தியடைந்த 14 அம்னோ எம்பிக்கள் ஆதரவை மீட்டுக் கொண்டனர். இதனால் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் கவிழ்ந்தது என்பதை முதலில் மொகிதீன் யாசின் உணர வேண்டும். ஊழல்வாதிகள் புத்ரா ஜெயாவை கைப்பற்றுவதை தாம் விரும்பவில்லை என்று மொகிதீன் யாசின் கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது. நாட்டில் கோவிட் 19 தொற்று மோசமடைந்து ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் இழந்தனர். மேலும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பக்கத்தான் ஹரப்பான் ஆட்சியை கவிழ்த்தவர் இவர் என்று குலசேகரன் சாடினார்.
