
ஜனநாயக நடைமுறையில் பிரச்சனைகளை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டுமென்று மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா இன்று கேட்டுக்கொண்டார் எந்த ஒரு பிரச்சனையும் ஜனநாயக நடைமுறையில் அனைத்து தரப்பினரும் பேச்சுக்கள் மூலம் தீர்வு காண வேண்டும். தங்களது சுயநலத்திற்காக நாடு மற்றும் மக்களின் எதிர்காலத்தை பணயம் வைக்க வேண்டாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர் கேட்டுக் கொண்டார். நாட்டில் நோய்த் தொற்றை கட்டுப்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகளில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். நோய்தொற்று தாக்கத்திலிருந்து நாடும் இன்னும் மீளவில்லை.சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடியினால் மக்கள் பலர் தங்களது வருமானத்தை இழந்துள்ளதை மாமன்னர் சுட்டிக்காட்டினார். இன்று 14 ஆவது நாடாளுமன்றத்தின் 4ஆவது தவணையின் முதலாவது கூட்டத்தொடரை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த போது மாட்சிமை தங்கிய மாமன்னர் தமது உரையில் இதனை சுட்டிக்காட்டினார்.
