
இளம் பேட்மிண்டன் வீராங்கனை கிஷோனாவை இனரீதியாக சிறுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் சம்மந்தப்பட்ட அரசியல்வாதிக்கு எதிராக போலீஸார் விசாரணையை தொடங்கியிருப்பதாக தேசிய போலீஸ் படை துணைத் தலைவர் டத்தோஸ்ரீ மஸ்லான் லாஜிம் தெரிவித்தார். இதனிடையே பேட்மிண்டன் வீராங்கனை கிஷோனாவுக்கு எதிராக முன் வைக்கப்பட்ட இனத்துவேச கருத்துகளுக்கு சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். மலேசியர்களை ஒன்றுபடுத்தும் களமாக விளையாட்டுத் துறை விளங்குகிறது. சுடிர்மான் கிண்ணப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மலேசிய பூப்பந்து அணிக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதே சமயம், தேசிய விளையாட்டாளருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட இன ரீதியான விமர்சனத்தை நான் கடுமையாக கண்டிக்கிறேன் என்றார் அவர்.
