
மேம்பாட்டு திட்டங்களுக்காக மத்திய அரசாங்கத்தால் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள இங்குள்ள கம்போங் சுங்கை டுவாவில் பாதிக்கப்படும் ஐந்து வழிபாட்டுத் தலங்களுக்கு,பினாங்கு மாநில நம்பிக்கைக்கு கூட்டணி அரசாங்கத்தின் உதவியால் மாற்று நிலம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் விரைந்து நடைபெற்று வருவதாக பத்து உபான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் ஆறுமுகம் தெரிவித்தார்.
இந்த இடத்தில பாதிக்கப்படும் 5 சீனர் ஆலயங்களும்,ஒரு இந்து ஆலயமும் அடங்கும்.இதில் சுமார் 70 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ்ரீ ஜடா முனீஸ்வரர் ஆலயத்துக்கு மாநில அரசாங்கம் 4,000 சதுர அடி தற்காலிக நிலத்தை முதலில் வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.இருப்பினும் அந்த நிலம் போதாது எனவும் கூடுதலாக இன்னும் 2,000 சதுர அடி என மொத்தம் 6,000 சதுர அடி நிலம் வேண்டுமென சம்பந்தப்பட்ட ஆலய நிர்வாகத்தினர் தம்மிடம் முறையிட்டதாக அவர் கூறினார்.
இதற்கிடையில் ஆலய நிர்வாகத்தின் வேண்டுகோளை பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதாக சொன்னார்.இந்த விவகாரத்தில் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவரும்,மாநிலத் துணை முதல்வருமான பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி நிச்சயம் உதவுவார் என தாமும்,ஆலய நிர்வாகத்தினரும் முழு நம்பிக்கைக் கொண்டுள்ளதாக குமரேசன் ஆறுமுகம் தெரிவித்தார்.
மேலும் பாதிக்கப்படும் வழிபாட்டுத் தளங்களை நிர்மாணிப்பதற்கு,மாநில அரசாங்கத்தின் முஸ்லீம் அல்லாதோர் நிதியிலிருந்து 45 ஆயிரம் வெள்ளியும் வழங்கப்படுகிறது.எனவே இந்த விஷயத்தில் உதவிகள் வழங்கி வரும் அணைத்து தரப்பினருக்கும் சட்டமன்ற உறுப்பினர் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
