
தீபாவளி நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் பந்திங் டூசுன் டூரியான் தோட்டப் பாட்டாளிகள் வாழ்வில் புது வசந்தம் வீசத் தொடங்கியுள்ளது. ஒரு மாதமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 23 தோட்டப் பாட்டாளிகள் இருட்டில் வாழ்ந்து வந்தனர். சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரியின் உதவியோடு தற்போது ஜெனரேட்டர் மூலம் வீடுகளுக்கு மின்சாரம் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது. சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சிறப்பு அதிகாரியும் செந்தோசா சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் நேற்று மீண்டும் டூசுன் டூரியான் தோட்டத்துக்கு வருகை புரிந்து தோட்டப் பாட்டாளிகளை சந்தித்தார்.

மோரிப் சட்டமன்ற உறுப்பினர் hasnul , கோலாலங்காட் கவுன்சிலர் ஹரிதாஸ், தீபன் சுப்பிரமணியம் மற்றும் கரு ஆகியோரும் உடன் இருந்தனர். தோட்ட பாட்டாளிகளுக்கு தீபாவளி பரிசாக பற்றுச் சீட்டுக்கள் வழங்கப்பட்டன. இதனிடையே 40,000 வெள்ளி செலவில் தெனாகா நேஷனல் மூலம் வீட்டிற்கு வீடு மின்சார மீட்டர்களை பொருத்தும் பணி தொடர்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக டாக்டர் குணராஜ் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் வீடமைப்பு குழுவுக்கு தலைமை ஏற்றுள்ள புவான் ரோட்சியாவின் உதவியோடு இந்த பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர் இருளில் வாழ்ந்த டூசுன் டூரியான் தோட்டப் பாட்டாளிகள் வாழ்வில் புது வசந்தம் வீசத் தொடங்கி இருப்பதாக குறிப்பிட்டார்.
