
இவ்வாண்டில் நாட்டிலுள்ள 220 தமிழ் பாலர் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய மித்ராவின் மானியம் எங்கே போனது என்று பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி சிவகுமார் கேள்வியை எழுப்பினார். கடந்த காலங்களில் மித்ரா மூலம் பாலர் பள்ளிகளுக்கு மானியம் வழங்கப்பட்டது. அந்த வகையில் இவ்வாண்டில் 220 பாலர் பள்ளிகளுக்கு கிடைக்கவேண்டிய மித்ரா மானியம் இதுவரை ஏன் வழங்கப்படவில்லை என்றார் அவர். நாட்டிலுள்ள பாலர் பள்ளிகளில் பயிலும் 6 ஆயிரம் மாணவர்கள் மற்றும் 200 ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைக்கவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது. பாலர் பள்ளிகளை நடத்தும் 5 சார்பற்ற இயக்கங்கள் இது தொடர்பில் என்னிடம் புகார் செய்திருப்பதாக தெரிவித்த அவர், பாலர் பள்ளிகளுக்கு சேர் வேண்டிய மானியம் குறித்து உடனடியாக அறிவிக்க வேண்டும். யார் யாருக்கோ லட்சக்கணக்கான வெள்ளி மித்ரா மூலம் வழங்கப்பட்டுள்ள செய்தி காட்டுத்தீ போல் பரவிக் கொண்டிருக்கிறது . ஆனால் பாலர் பள்ளிகளுக்கு இந்த மானியம் வழங்கப்படாதது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது என்றார் அவர்.



