
தன்னுடைய நற்பெயரைக் கெடுக்கும் விதமாக இட்டுக்கட்டிய அவதூறு அறிக்கைகளை வெளியிட்டுவரும் ஒரு தமிழ் நாளிதழுக்கு எதிராக புகார் செய்வதாக மலேசிய முன்னேற்றக் கட்சி தலைவர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார். தனக்கு எதிராக குற்றவியல் அவதூறுகளை வெளியிடும் வேலையை அண்மைய நாட்களாக மீண்டும் அந்த நாளிதழ் தொடங்கி உள்ளது. தற்போதைய அமைச்சர் ஹலிமாவின் பொறுப்பில் உள்ள மித்ரா நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டு அதில் பெருமளவு ஒரு கட்சி தலைவர்களுக்கு வாரி வழங்கப்பட்டுள்ளதாக பரவலாக கூறப்படுவதன் தொடர்பில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியது அனைவரும் அறிந்த உண்மை. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஹலிமா நேரடியாக பதில் சொல்வதை விடுத்து 2020 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளுக்கான மித்ரா நிதியில் நான் அதிகமாக பயன்படுத்தி விட்டதாக பொய்யான குற்றச்சாட்டை நாடாளுமன்றத்தில் ஹலிமா சுமத்தினார். இதனால், ஒற்றுமைத் துறையின் தற்போதைய அமைச்சர் ஹலிமாவின் பொறுப்பில் இருக்கும் மித்ரா நிதி அதிக அளவில் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ள தகவல் பொதுமக்களின் கவனத்தை பேரளவில் ஈர்த்தது. இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு முன்னாள் அமைச்சரான தன் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுகளை அந்த நாளிதழ் வெளியிட்டு வருகிறது என்று அவர் சொன்னார்.



