
மலேசிய முன்னேற்றக் கட்சி தலைவரும் முன்னாள் அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி ஒற்றுமைத் துறை அமைச்சர் டத்தோ ஹலிமா சாதிக்கிற்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்துள்ளார். அக்டோபர் 6-ஆம் நாள் நாடாளுமன்றத்தில், மித்ரா நிதியில் பெருமளவு ஓர் இந்தியக் கட்சியினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதன் தொடர்பாக நம்பிக்கைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் தெரிவித்த ஹலிமா, தனக்கான ஒதுக்கீட்டை வேதமூர்த்தி பயன்படுத்தி விட்டதாக குற்றம்சாட்டினார். இது குறித்து அடுத்த நாளே பொன்.வேதமூர்த்தி வெளியிட்ட அறிக்கையில் ஹலிமா நாடாளுமன்ற சிறப்பு அந்தஸ்தின் பின் ஒளிந்து கொள்ளாமல் இந்தக் குற்றாச்சாட்டை நாடாளுமன்றத்திற்கு வெளியே சொல்லுமாறு சவால் விடுத்தார். ஆனால், ஹலிமா மறுத்துவிட்டார். அக்டோபர் 10-ஆம் நாள் தன்னுடன் சேர்ந்து ஊழல் தடுப்பு ஆணையத்தில் புகார் செய்ய வரும்படியும் ஹலிமாவிற்கு அடுத்த சவாலை விடுத்தார். ஹலிமா தவறு இழைத்திருப்பது உண்மையல்ல என்றால் அது வெளிச்சத்துக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
