
இந்திய சமுதாயம் பொருளாதாரத்தில் முன்னேற்ற வேண்டும் என்ற இலக்கில் 40 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட மைக்கா ஹோல்டிங்ஸ் இனி எந்த நேரத்திலும் மூடப்படலாம். மைக்கா ஹோல்டிங்ஸ் நம்பி 10 கோடி வெள்ளி பணம் போட்ட ஏழைகளுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது. பணம் போட்ட பங்குதாரர்களுக்கு வட்டியுடன் சேர்த்து பணம் திருப்பி கொடுக்கப்படவில்லை. ஆனால் ஒரு வெள்ளி பங்கு பணத்திற்கு வெறும் 80 காசு மட்டுமே வழங்கப்பட்டது. பல ஆண்டுகளுக்கு பின்னரே அதுவும் பல போராட்டங்களுக்கு மத்தியில் இந்த பணம் திரும்ப கிடைத்தது. இருப்பினும் இன்னமும் 5,000 க்கும் மேற்பட்ட பங்குதாரர்கள் பணத்தை எடுக்காமல் உள்ளதாக பங்குதாரர்களில் ஒருவரான எஸ்.கே. மகேஷ் தெரிவித்தார். மைக்கா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தில் போட்ட பணத்தை ஒரு வங்கியில் போட்டு இருந்தால் வட்டியோடு சேர்த்து பணம் கிடைத்திருக்கும். ஆனால் 66,000 பங்குதாரர்கள் வஞ்சிக்கப்பட்டதான் பெரும் ஏமாற்றம் என்று அவர் கூறினார்.

தீயணைப்பு படை வீரர் முகமட் அடிப் மரணம் மற்றும் முன்னாள் அட்டர்னி ஜெனரல் டான்ஸ்ரீ தோமி தோமஸ் பற்றி விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக்குழு அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல் 60,000 பங்குதாரர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை பற்றி விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மைக்கா ஹோல்டிங்ஸ் ஒரு பழைய விவகாரம் என்றாலும் எதனால் அது மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது ஏன் என்பது பற்றி விசாரிக்கப்பட வேண்டும என்று அவர் கேட்டுக் கொண்டார். இந்நாட்டில் இந்திய சமுதாயத்திற்கு மைக்கா ஹோல்டிங்ஸ் ஒரு கருப்பு அத்தியாயம் என்று வர்ணித்த எஸ்கே மகேஷ் அநீதி இழைக்கப்பட்ட சமுதாயத்திற்கு காலம் கடந்தாவது நீதி கிடைத்தால் அது கோடி புண்ணியம் என்று வர்ணித்தார்.
