
சிலாங்கூர் மாநிலத்தில் புகழ் பெற்ற மை எஃப் சி ஸ்டார் கிளப் ஏற்பாட்டில் இன்று அக்டோபர் 24ஆம் தேதி காலை 8.00 மணிக்கு வெட்ரன் மற்றும் ஒன்பதின்மர் கிண்ண கால்பந்துப் போட்டி மிகப்பெரிய அளவில் பெட்டாலிங் ஜெயா லோட் 10 திடலில் நடத்தப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நடத்தப்படும் முதல் போட்டியாக இது விளங்குகிறது என்று மை எஃப் சி யாங்ஸ்டார் கிளப் தலைவர் மணி தெரிவித்தார். வெட்ரன் கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் குழுவுக்கு 5,000 வெள்ளி ரொக்கப்பரிசு காத்துக்கொண்டிருக்கிறது. இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் குழுவுக்கு 2,500 வெள்ளி, மூன்றாவது இடத்தை பிடிக்கும் குழுவுக்கு 1,500 வெள்ளி மற்றும் 4ஆவது இடத்தை பிடிக்கும் குழுவுக்கு 500 வெள்ளி வழங்கப்படும். ஒன்பதின்மர் கிண்ண கால்பந்து போட்டியில் வெற்றிபெரும் குழுவுக்கு 3,000 வெள்ளி, இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் குழுவுக்கு 1,500 வெள்ளி மூன்றாவது இடத்தை பிடிக்கும் குழுவிற்கு 1,000 வெள்ளி, நான்காவது இடத்தைப் பிடிக்கும் குழுவிற்கு 500 வெள்ளி வழங்கப்படும் என்று அவர் சொன்னார். இன்று மாலை 5 மணிக்கு இறுதி ஆட்டம் நடைபெறுகிறது. வெட்ரன் மற்றும் ஒன்பதின்மர் கிண்ணப் போட்டியில் வாகை சூடும் கிளப் எது என்பது தெரிந்துவிடும் என்று அவர் கூறினார்.
