
இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக ஆண்டுதோறும் அரசாங்கம் வழங்கி வரும் மித்ரா நிதியை முறையாகவும்,நியாயமாகவும் கையாள்வதற்கு சிறப்பு நடவடிக்கைக் குழுவை அமைத்து செயல்பட வேண்டுமென பினாங்கு பத்து உபான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் ஆறுமுகம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இக்குழுவில் எந்தவொரு அரசியல் தலைவர்களோ அல்லது அரசியல் தலையீடோ இருக்கக் கூடாது.
சிறந்த தொழில்முறை அனுபவம் கொண்டவர்களை குழுவில் நியமித்து ,மித்ரா நிதிக்கு செய்யப்படும் விண்ணப்பங்களை முறையாக பரிசீலனை செய்த பின்னரே,அதற்கான நிதியை வழங்க வேண்டியது கட்டாயமாகும். இதுவரையில் இப்படியொரு குழுவை அமைக்காமல் செயல்பட்டதன் காரணமாகத்தான்,இன்று சமுதாயத்துக்கு போய் சேர வேண்டிய 100 மில்லியன் மித்ரா நிதி,யார் யாருக்குப் போனதோ,எப்படிப் போனதோ,எங்கு போனதே என்ற நிலை தெரியாமல் போனதால் அதன் கதி இன்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் வாசலில் போய் நிற்பது வெட்கக்கேடாக உள்ளது என பத்து உபான் உபான் தொகுதி கெஅடிலான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் ஆறுமுகம் தெரிவித்தார்.
