
சிலாங்கூரில் வேலை செய்வோர் மற்றும் தங்கியிருப்போர் தங்களின் முதல் வீட்டை சொந்தமாக்கிக் கொள்ளும் வகையில் ஆறு ரூமா இடாமான் வீடமைப்புத் திட்டங்களை மாநில அரசு உருவாக்கவுள்ளது என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி தெரிவித்தார். இந்த வீடுகள் பண்டார் சவுஜானா புத்ரா, ஷா ஆலம், பூச்சோங், சைபர் சவுத், பண்டார் புஞ்சாக் ஆலம் போன்ற கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் உருவாக்கப்படும். ஆயிரம் சதுரஅடி பரப்பளவைக் கொண்ட இந்த வீடுகள் 2 லட்சத்து 50,000 வெள்ளி விலையில் விற்கப்படும் என்று அவர் சொன்னார். இந்த வீடுகள் மூன்று அறைகள், இரண்டு குளியறைகள், இரு கார் நிறுத்துமிடங்கள், தொலைக்காட்சி, குளிர்பதனப் பெட்டி மற்றும் அலமாரி ஆகிய வசதிகளைக் கொண்டிருக்கும் என்றார் அவர்.
