
அரசாங்கத்தின் மேம்பாட்டு திட்டத்தால் தென் செபராங் பிறை நிபோங் திபால் கம்போங் சங்லாங்கில் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள சுமார் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ்ரீ சிவமுனீஸ்வரர் மற்றும் காளியம்மன் ஆலயத்தை காப்பாற்றுவதற்கு, தேவையான மாற்று இடத்தை அடையாளம் காண உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமென பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி தெரிவித்தார். கூட்டரசு சாலையின் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால் அங்கிருந்து வெளியேற்றப்படவிருக்கும் இந்த ஆலயத்திற்கு,மாநில அரசாங்கத்தின் ஓர் நிலம் அடையாளம் காணப்படும் என்றார். மேலும் இது குறித்து பொதுப்பணி இலாகா மற்றும் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேசி,நல்ல முடிவு காண தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவருமான பேராசிரியர் பி.இராமசாமி நம்பிக்கை தெரிவித்தார். எந்தவொரு நல்ல தீர்வும் இல்லாமல் வெறுமனே ஆலயத்தை உடைத்து விட்டு செல்லும் செயலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றார். அவர் ஆலயத்துக்கு நேரில் வந்து நிலவரங்களை நேரில் கேட்டறிந்தார்.
