
முவாஃபாகாட் நேஷனலின் கீழ் அரசியல் புரிந்துணர்வை தொடர பாஸ் கட்சியும் அம்னோவும் இணங்கி விட்டப் போதிலும் வரும் 20ஆம் தேதி நடைபெறவிருக்கும் மலாக்கா மாநிலத் தேர்தலில் இவ்விரு கட்சிகளுக்குமிடையே நிச்சயமாக மோதல் ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தஸ்மானியா பல்கலைக்கழகத்தின் ஆசிய ஆய்வுத் துறை இயக்குநர், பேராசிரியர் டாக்டர் ஜேம்ஸ் சின் தெரிவித்தார். தனியே செல்லவிருப்பதாக பாஸ் அறிகுறியைக் காட்டி விட்டப் போதிலும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் அம்னோவுடன் இணைந்து செயல்படுவதாகக் கூறியதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இதில் உறுதியாகத் தெரிவது அம்னோ-பாஸ் கட்சியின் ஒத்துழைப்பு 100 விழுக்காடு உண்மையில்லை. மாறாக ஒருசில சட்டமன்றத் தொகுதிகள் மட்டுமே என்பதால் அவை அவற்றின் சொந்த தொகுதிகளாகவே கருதப்படுகின்றன என்றார்.



