
கூட்டரசுச் சட்டத்தில் கட்சித்தாவல் தடுப்புச் சட்டத்தை இயற்றினால் மட்டுமே கட்சித் தாவலை தடுத்து நிறுத்த முடியுமென்று ஜசெக அமைப்பு செயலாளர் அந்தோனி லோக் தெரிவித்தார். மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் 28 தேசிய முன்னணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றவுடன் கட்சித்தாவல் மாட்டோம் என்று சத்திய பிரமாணத்தில் கையெழுத்திட வேண்டும் என்று அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால் இந்த சத்தியப்பிரமாண உறுதி மொழி செல்லாது என்று அந்தோனி லோக் சுட்டிக்காட்டினார். 2004 இல் நடைபெற்ற தேர்தலில் பகாவ் சட்டமன்றத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜசெக வேட்பாளர் தேசிய முன்னணிக்கு அணி தாவினார். அப்போது நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசாராக டத்தோஸ்ரீ முகமட் ஹசான் இருந்தார் என்பதை மறந்து விடக்கூடாது. கட்சி தாவல் தடுப்பு சட்டத்தின் மூலம் இந்த அணி தாவலை தடுத்து நிறுத்த முடியும் என்பதால் அனைத்து கட்சிகளும் இந்த சட்டம் நிறைவேறுவதற்கு ஆதரவு தர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.



