
‘மூடா’ என்னும் மலேசிய ஐக்கிய ஜனநாயக முன்னணி, நம்பிக்கைக் கூட்டணியில் இருக்கும் தவளை அரசியல்வாதிகளுடன் இணைந்து அரசியல் பணியாற்ற முடியாது என்று அறிவித்துள்ளது. புதிய அரசியல் இயக்கமான மூடா-வின் தலைவர் சைட் சாடிக் அப்துல் ரகுமான், நம்பிக்கைக் கூட்டணியுடன் இணைந்து மலாக்கா மாநிலத் தேர்தலில் களம் இறங்க விரும்புவதாக அறிவித்திருந்த நிலையில், அம்னோ தலைமையிலான மலாக்கா மாநில கொல்லைப்புற ஆட்சி கவிழ்வதற்கு காரணமான நால்வரில் இருவருக்கு நம்பிக்கைக் கூட்டணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில் மூடா கட்சி தற்பொழுது இந்த நிலையை எடுத்துள்ளது. நம்பிக்கைக் கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அதில் இணைவதாக சைட் சாடிக் அறிவித்திருந்தபின், அந்தக் கட்சிக்கு மலாக்காவில் உள்ள 28 தொகுதிகளில் ஒரு தொகுதியில் வாய்ப்பு அளிக்கப்படும் என்ற தகவலும் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
