
ஹரிராயா பெருநாள், தீபாவளி திருநாள், கிறிஸ்துமஸ் பண்டிகை, மெர்டேக்கா தினம் உள்ளிட்ட திருநாள் – பெருநாட் காலங்களில் கூகுள், யாகூ போன்ற இணைய தளங்களைப் போல மலேசிய அரசத் துறைகள், ஜி.எல்.சி. நிறுவனங்கள், வங்கிகள் போன்ற பொருளகங்களின் இணையப் பக்கங்களில் வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். .இதில், சம்பந்தப்பட்ட. விழா அல்லது பண்டிகை சார்பில் பொருத்தமான படம் அல்லது காட்சியை அந்தந்த நிறுவனம் அல்லது துறை சார்பில் இடம்பெறச் செய்யும்பொழுது குறிப்பிட்ட விழா அல்லது பண்டிகையைக் கொண்டாடுவோர் இன்புறுவர். குறிப்பாக வங்கிகளின் இணையப் பக்கங்களைப் போலவே ஏடிஎம் இயந்திரங்களிலும் அவ்வாறு செய்து வருகின்றனர். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டும் மே வங்கி அதனுடைய ஏடிஎம் இயந்திரங்களுக்கான கணினி திரைகளில் அவ்வாறு செய்துள்ளது. அதில் இந்து இளைஞர் ஒருவர் பாரம்பரிய உடையில் கையில் விவேக தொலைபேசியுடன் தோன்றுகிறார். ஆனால், அந்த இளைஞர் ஒரு தமிழராகத் தெரியவில்லை. அப்பட்டமான வட இந்தியராகத் தெரிகிறார். இந்த நாட்டில் வாழ்கின்ற இந்தியர்களில் 85%-க்கும் மேலோராக தமிழர்கள் இருக்கும்பொழுது ஒரு தமிழன் அல்லது தமிழச்சியைக் காட்ட மே வங்கி முன் மந்திரிக்க வேண்டும். நூற்றுக் கணக்கான ஆண்டுகளுக்குமுன் இந்த நாட்டை வளப்படுத்தும் முகமாக இரத்தமும் வியர்வையும் சிந்தியவர்கள் தமிழர்கள்; தண்டவாளம் அமைத்தவர்களும் சாலை போட்டவர்களும் தமிழர்கள். இயற்கை வளம் மற்றும் வேளாண்தொழிலை பொருளாதாரத்திற்கு அடிப்படையாக மலாயா கொண்டிருந்த காலத்தில் அரும்பாடு பட்டவர்கள் தமிழர்கள். இப்பொழுது எல்லாமும் மாறிவிட்ட நிலையில், மலேசியாவும் தொழில் வள மேம்பாட்டு நாடாக உருமாறியுள்ள நிலையில் தமிழர்களும் அவர்களின் தாய்மொழியும் எல்லாமட்டத்திலும் இரண்டாம் பட்சமாக ஆகிவிட்டது.
