
மலாக்கா மாநிலத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றி பெற்றால், தேசிய முன்னணியும் பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியும் திகில் அடைந்து வரும் 15-ஆவது பொதுத் தேர்தலில் ஓரணியாக களம் காணக்கூடும் என்று அமானா உதவித் தலைவர் காலிட் சமாட் தெரிவித்துள்ளார். நவம்பர் 20-ஆம் நாளுக்குப் பின் பக்கத்தான் ஆட்சி மலாக்காவில் அமைந்தால், பக்கத்தான் ஹரப்பானுக்கு எதிராக அரசியல் களம் காணும் மற்ற இரு கூட்டணிகளும் தங்களின் விரைப்பான போக்கையும் முறைப்பான அணுகுமுறையையும் மாற்றிக் கொண்டு கைகுலுக்குக் கொள்ளும் என்று அமானாவின் தேசிய தகவல் இயக்குநரும் ஷா ஆலம் எம்பியுமான காலிட் தமது அரசியல் பார்வையை முன்வைத்துள்ளார். காரணம், இவ்விரு தரப்பிற்கும் தெளிவான அரசியல் பார்வையோ கொள்கையோ இல்லை; மாறாக, அரசியல் ஆதாயமும் பதவி நோக்கமுமே அடிப்படை என்பதால் மீண்டும் தங்களுக்குள்ளே முட்டி மோதிக் கொள்ளும் நிலை தோன்றும் என்று காலிட் சமாட் மேலும் தெரிவித்துள்ளார்.



