
செடிக் முதல் இன்று மித்ரா வரை ஏழை இந்திய சமுதாயத்திற்கு சேரவேண்டிய கோடிக்கணக்கான நிதி ஒதுக்கீடு மோசடி தொடர்பில் ஒளிவு மறைவின்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி ஊழல் தடுப்பு ஆணையத்தை வலியுறுத்தியுள்ளார். பக்கத்தான் ஹரப்பான் ஆட்சியில் நிதி ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள் மீது மட்டுமே விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படுவது முறையல்ல. அன்று செடிக் முதல் இன்று பெரிக்கத்தான் வரை நிதி ஒதுக்கீடு மோசடி தொடர்பில் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக அதனை நடத்தப்பட வேண்டும். ஒரு அரசியல் கட்சி மட்டுமே மித்ராவிடம் இருந்து அதிக அளவில் நிதியை பெற்றிருக்கிறது. இந்த நிதி முறையாக சமுதாயத்துக்கு போய் சேர்ந்ததா என்பது தான் கேள்வி. ஆகவே விசாரணை என்ற போர்வையில் ஒரு தரப்பை மட்டுமே விசாரிப்பது முறையல்ல. கூண்டோடு அனைவரையும் விசாரணை நடத்தி தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.



