
தேசிய முன்னணியும் பெரிக்கத்தான் நேஷனலும் ஒற்றுமையைப் பற்றியும் நல்லிணக்கத்தையும் பேசுகின்றன தவிர, நடைமுறையில் இவ்விரண்டு அணியும் இப்போது பகிரங்கமாக மோதி வருகின்றன. குறிப்பாக, பெர்சத்து கட்சியும் அம்னோவும் ஓயாமல் சண்டையிட்டுக் கொள்கின்றன என்பதை மலாக்கா வாக்காளர்கள் அவசியம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று பக்கத்தான் ஹரப்பான் கூட்டணித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கேட்டுக் கொண்டுள்ளார். வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள மாநிலத் தேர்தலில் ஒருவேளை இந்த இரு அணிகளில் எந்த அணி வென்றாலும், மாநில அரசியலின் நிலைத்தன்மை மேலும் மோசமடையும். தேர்தல் முடிவு எப்படி இருந்தாலும் இந்த இரு அணிகளும் பதவி அதிகார வேட்டையில் ஈடுபடும். பெரிக்கத்தான் கூட்டணி வென்றாலும் தேசிய முன்னணி வென்றாலும் இதுதான் தொடரும். மலாக்கா மாநிலத்தில் நிலையான ஆட்சிக்கு பக்கத்தான் ஹரப்பானுக்கு வாக்களிக்கும் படி மலாக்கா மக்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.



