
மலாக்காவில் கட்சி தாவலுக்கு எதிரான சட்டம் இயற்றப்படும் என அம்னோ மற்றும் தேசிய முன்னணி தலைவரான டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார். மலாக்கா மாநிலத்தில் நிலைத்தன்மையான நிர்வாகத்திற்கு கட்சி தாவலுக்கு எதிரான சட்டத்தை இயற்ற வேண்டியது அவசியம் ஏற்பட்டுள்ளது. மலாக்கா சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வென்றதைத் தொடர்ந்து உரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்தார். நிலைத்தன்மையும் சுபிட்சமும் வேண்டும் என்பதை மலாக்கா வாக்காளர்கள் தேர்தல் முடிவின் மூலம் காட்டியுள்ளனர். அவர்களது நம்பிக்கைக்கு பாத்திரமாக தேசிய முன்னணி தேர்தல் கொள்கை அறிக்கையில் வழங்கப்பட்ட வாக்குறுதியை தேசிய முன்னணி நிறைவேற்றும் என்றும் டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹமிடி கூறினார்.



