
ஞாயிற்றுக்கிழமை காலை, பிறை கடற்கரை ஆலயத்தில் வேண்டுமென்றே குழப்பம் ஏற்படுத்தி, கைகலப்பில் ஈடுபட்ட முருகேசன் என்ற நபரை போலீசார் கைது செய்து, புக்கிட் மெர்தாஜாம் நீதிமன்றத்தில் 5 நாள் தடுப்புக்காவலில் எடுத்தனர். பிறை கடற்கரை முனீஸ்வரர் ஆலயத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு, பினாங்கு இந்து அறப்பணி வாரியம் ஈமச்சடங்குகளை செய்யும் தளம் ஒன்றை அமைத்து, அந்த ஆலய நிர்வாகத்திடம் வழங்கியது. அதன் பிறகு, பிறை ஜாலான் பாரு முனீஸ்வரர் ஆலயம், பினாங்கு மாநில அரசு ஆகியவற்றின் நிதி உதவியின் வழி அந்த கிரிகைத்தளம் மேலும் சிறப்பாக மேம்படுத்தப்பட்டது. இந்த கிரிகை தளம் நிர்மாணிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகி, மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில், திடிரென்று பிறை கடற்கரை முனீஸ்வரர் ஆலயத்துக்கு வந்த முருகேசன் என்ற நபர், “இந்த ஆற்றில் இரசாயனம் கலந்துள்ளது; இங்கே குளிப்பவர்கள் நோய் வந்து சாக வேண்டுமா?” என பிரச்சனை செய்ய தொடங்கினார். ஆலயத்தில் வழிபாட்டுக்கு வந்திருந்த பொதுமக்கள், “ஆற்றில் இறங்கி யாரும் குளிப்பதில்லை; ஈமச்சடங்கு செய்பவர்கள் மூழ்கி எழுவதற்குத்தான் குளம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது; ஆற்றில் சோற்று பிண்டங்களை மட்டுமே கரைப்பார்கள்” என்று விளக்கியும், அந்த நபர் தொடர்ந்து அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, ஆலய வளாகத்தில் கொச்சை வார்த்தைகளை பயன்படுத்தி திட்ட தொடங்கினார். இதனால், அங்கே பதற்றமான நிலை ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்தும் அங்கு கூடியிருந்தவர்களை முருகேசன் என்ற அந்த நபர் இழிவுப்படுத்தி பேசியதால், வாக்குவாதம் முற்றி கைகலப்பு வரை சென்ற வேளையில், முருகேசன் என்ற நபர் அங்கிருந்து ஓட்டம் எடுத்தார். இவ்வேளையில், ஆலய நிர்வாகத்தினரும் பொதுமக்கள் சிலரும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்துக்கொண்ட அந்நபர் மீது அளித்த புகாரை அடுத்து, ஞாயிற்றுக்கிழமை இரவு, முருகேசன் என்ற அந்த நபர் கைது செய்யப்பட்டார்.



