
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் கண்ட தோல்வியால் பக்கத்தான் தலைவர் பதவியில் இருந்து டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விலக வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கும் ஜசெக பெலுட் சட்டமன்ற உறுப்பினர் லீ சின் சென் தனது அறிக்கையை மீட்டுக் கொள்ள வேண்டும் என்று கெஅடிலான் கட்சி 24 மணி நேரம் காலக்கெடு விதித்துள்ளது. குவாந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் பாவ்சியா சாலே இன்று வெளியிட்ட அறிக்கையில் இந்த காலக்கெடுவை விதித்துள்ளார். டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள ஜசெக சட்டமன்ற உறுப்பினரையும் அவர் சாடினார். மலாக்காவில் கண்ட தோல்வியை ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த தோல்வியில் இருந்து நாம் மீட்சி பெற பாடுபடுவோம். நாட்டின் 15 ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள இப்போதே தயாராகுவோம். அதைவிடுத்து டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீது மட்டும் குறை கூறுவது முறையல்ல என்று அவர் சுட்டிக்காட்டினார்.



